அமைதியை எதிர்நோக்கி

அமைதி. வாழ்வின் பெரும்பாதியில் இந்த அமைதியைத் தேடியோ, அமைதியைத் தழுவும் நிலைகளுக்கு நடுவிலோதான் கடக்கிறோம். பல நேரங்களில் அதன்மீது ஒவ்வாமையோ பயமோகூட இருப்பதுண்டு. கலைத்துக்கொண்டு வெளியில் வந்துவிட எவ்வித முயற்சிகளையும் செய்வதுண்டு. எனினும் அந்த இடைவெளிகள் இயல்பைவிட நீட்டிக்கப்பட்ட அளவிலிருக்கும் போது நிகழும் ஒவ்வொரு கணமும் அடுத்த மைல்கல்லுக்கு ஓட்டமும் நடையுமாகவாவது சென்றுசேரவே மனம் துடிக்கும்.

மனம் பிறழ்ந்த பெண்ணொருத்தி தன் அபிமான எழுத்தாளரை ஆபத்திலிருந்து காப்பாற்றித் தன் வீட்டிலேயே அடைத்துவைக்கிறாள். அந்த எழுத்தாளர் இச்சிக்கலைப் புரிந்து பின் தப்பிக்கத் துடிப்பதுதான் ’ஜூலி கணபதி’(2003). பாலுமகேந்திரா இதன் மூலக்கதையை ‘Misery'(1987) என்ற நாவலிலிருந்து எடுத்திருக்கிறார். ஆனால் அவர் அந்த நாவலின் அடிப்படையில் வந்த ‘Misery'(1990) படத்தையும் பார்த்திருக்கக்கூடும் என்றுதான் நினைக்கிறேன்.

அடிப்படை ஒன்றானாலும் இரண்டும் வெவ்வேறு படங்களாகத்தான் எனக்குத் தெரிகின்றன. அமெரிக்காவுக்கும் தென்னிந்தியாவுக்கும் உள்ள பருவகாலங்களின் வேறுபாடே இதற்கு முதற்காரணம். முன்னதில் பனிக்காலமும் தமிழ்ப் படத்தில் மழைக்காலமும் படங்களின் பின்புலங்கள். ஆங்கிலப் படத்தில் அடர்பனிக்காலம் தரும் தளர்ச்சியைப் படம்நெடுக உணர்த்துவதையும், படம் முடிந்தபின்னும் அது தொடரும் வகையில் இருப்பதையும் பின்னணி இசை மூலம் உணர்த்துகிறார் இசையமைப்பாளர் மார்க் செய்மன். படத்தின் முதல் காட்சியிலிருந்தே நம் மனத்தில் துன்பத்தையும், பயத்தையும் ஏற்படுத்தும் விதம் இசையமைத்திருக்கிறார். இறுதிக் காட்சியிலும் இதை நீட்டித்துப் படம் தரும் தாக்கத்தை நீட்டித்திருக்கிறார்.

ஜீலி கணபதி இதற்கு நேரெதிர். மனித நடமாட்டத்தைச் சில மணி நேரங்களே மழையால் நிறுத்தமுடியும் என்பதைப் போல் அமைதிக்கு நடுவே நிகழும் ஒரு மணிநேரமாகவே படத்தை மாற்றியமைத்துள்ளார் பாலு. படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள் அன்றாட நிகழ்வுகளே – பின்னணி இசையென்று எதுவுமே கிடையாது. ஆற்று வெள்ளத்தில் காருக்குள் சிக்கிய தன்னைக் காப்பாற்றித் தன் வீட்டில் சிகிச்சையளிக்கும் சரிதாவை ஜெயராம் கண் திறந்து பார்க்கும்போதுதான் ராஜா தன் இருப்பை உணர்த்துகிறார்.

’Misery’யில் நாயகனுக்குக் குடும்பம் இருப்பதாகக் காட்டப்படுவதில்லை. அதனால் நாயகனின் உணர்ச்சிகளிலும், பின்னணி இசையிலும் அவனின் பயமும், துன்பமும் மட்டும்தான் நமக்குக் கடத்தப்படுகிறது. ஜூலி கணபதிக்கு ‘Misery’யைவிடக் கூடுதலான குறிக்கோளும் உணர்வுகளும் உண்டு – ஏக்கம், பிரிவாற்றாமை. ஜெயராம் திருமணமாகிக் குழந்தை உள்ளவர். முதல் பதினைந்து நிமிடங்களில் இவர்களை அறிமுகப்படுத்துவதுடன் படம்நெடுக ரம்யாகிருஷ்ணன் தன் கணவனை எதிர்பார்த்து ஏங்கும் காட்சிகளும் உண்டு. குடும்பம் மீண்டும் நெகிழ்ச்சியுடன் இணைவதாகத்தான் படமும் முடிகிறது.

இந்தப் பின்புலங்களை எல்லாம் முன்வைத்தே நாம் இரண்டு படங்களின் பின்னணி இசையையும் புரிந்துகொள்ள வேண்டும். தன்னைக் காப்பாற்றியவள் மனநலமற்றவள் என்பது தெரிந்ததும் ஜெயராம் உணரும் கையறு நிலையையும், தன் மனைவியை நினைத்து ஏங்குவதையும் மறுபக்கம் ரம்யாகிருஷ்ணன் படும் துன்பத்தையும் நாற்பது நொடிகளில் இரண்டு சரடுகளில் தீட்டியிருக்கிறான் நம் இசையரசன். While the percussion retains the tension, strings and the flute speak for Jeyaram’s sorrow as a solo violin seethes in taking Ramya’s side and ends with invoking Ithayame. அலகிலா விளையாட்டு!

http://splicd.com/nrccIYBSWCo/2785/2835

(ஒலி மட்டும்)

இந்தத் தொடரைத் தவிர மற்ற காட்சிகளும் அவைதரும் உணர்வுகளும் இரு படங்களிலும் ஒன்றேதான். நாம் பல படங்களில் பார்த்துக் கேட்டுப் பழகியதானாலும், ஒப்பிட்டு உணர்ந்தோத இந்தப் படங்கள் வசதி தருகின்றன. படத்தின் அடிச்சரடு மார்க் செய்மனுக்குத் தரும் குறிக்கோள் – பயம், அது தரும் துன்பம் – இரண்டையும் படம்முழுக்க செவ்விசை மூலம் கடத்துவது. நம்மாள் அதற்கு நேரெதிராச்சே. துல்லியம் என்பதே ராஜாவின் மொழி. ஒரு காட்சி தரும் எல்லாக் கருத்துக்களையும், உணர்வுகளையும் தனக்கே உரிய மொழியில் ரசிகனுக்கு உணர்த்திக்கொண்டே செல்வதே குறிக்கோள்.

பத்து நிமிடங்கள் – திகிலும், அமைதியும் மாற்றி மாற்றி உச்சத்தைத் தொடும் பத்து நிமிடங்கள் – இரு இசையமைப்பாளர்களும் படத்தின் தன்மைக்கேற்ப அற்புதமாக விளையாடியிருக்கும் களம்.

Misery:

ஜூலி கணபதி:

http://splicd.com/nrccIYBSWCo/4597/5204

வெளியில் சென்றிருக்கும் பெண் திரும்பி வருவதற்குள் அடைபட்டுக் கிடக்கும் அறையிலிருந்து வெளிவந்து வீட்டைச் சுற்றிப் பார்த்து, யாருடனும் பேசமுடியுமா, தப்பிக்கமுடியுமா, உதவி கிடைக்குமா என்று எவ்வளவோ யோசித்துச் சுற்றி அலைகிறான் நாயகன். அந்தப் பெண் திரும்பி வரும் நேரத்தில் மீண்டும் அறை வந்து அடைந்து கொள்வதுடன் காட்சி முடிகிறது. ராஜாவை நாம் ஆராதிக்கும் முழுமுதற் காரணமே துல்லியம்தானே. இவ்வளவும் நடப்பதை அங்கங்கு தன் மாயவித்தையில் அடிக்கோடிட்டபடியே செல்கிறார். மார்க் செய்மனுக்கு இது தேவைப்படவுமில்லை, செய்யவுமில்லை என்பது வேறு கதை.

அறைக் கதவைத் திறக்கக் கீழே கிடக்கும் கொண்டை ஊசியை எடுத்து பயம், கால் வலி, கள்ளத்தனத்துடன் மெல்ல நகர்ந்து கதவைத் திறக்க முயற்சி செய்கிறார்:

உதவிக்கு அழைக்க முடியுமோ என்று ஆர்வமும், நம்பிக்கையும் மேலிட தூரத்தில் இருக்கும் தொலைபேசியை நெருங்குவதும், அது பழுதடைந்தை அறிந்து வேதனையடைவதும்:

எதேச்சையாகத் திரும்பும்போது மேசையில் இருந்த பொம்மையைத் தன் இருசக்கர வண்டி தட்டிவிட, அதையெடுத்து மேலே வைக்கிறார். அந்த பொம்மை முன்னிருந்த திசையில் பார்க்காதது பின்னால் துன்பத்தில் நேரிடும் என்பதைச் சொல்லவும் தவறவில்லை:

இப்படி ஒவ்வொன்றையும் அடிக்கோடிடத்தான் வேண்டுமா என்றால் ஆமாம், இந்தப் படத்தின் தன்மை அப்படி. பயம், துன்பம், ஏக்கம், ஆற்றாமை, கள்ளத்தனம் என்று அனைத்தையும் கண்டபின்னர் ஜெயராம் குடும்பத்துடன் இணைவதில் உள்ள மகிழ்ச்சியும் கிடைக்கும் அமைதியும் நிலைப்பதுதான் படத்தின் களம். இவற்றையெல்லாம் தெளிவாக நாம் உணர்வதுதான் படத்தின் வெற்றி, ராஜாவின் வெற்றி.

இந்த வாரம்(27-July-2013) IRMR இல் ஒலிபரப்ப இருக்கும் பின்னணி இசைத்தொகுப்பின் teaser:

மேலும் பார்க்க:

http://mafiaradio.wordpress.com/

12 thoughts on “அமைதியை எதிர்நோக்கி

  1. வியப்பா இருக்கு – உங்களின் முயற்சிகளும் ஆர்வமும். வாழ்த்துகள்.

    P.S – ரொம்ப நல்லா எழுதறீங்க.

  2. மயிலு நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க. அருமை 🙂

Leave a reply to amas32 Cancel reply